சென்னை: சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர்க்கடன்பெற்ற விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா / தாளடி / பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதுவரை 15.95 இலட்சம் ஏக்கர் பரப்பளவு சுமார் 11 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவம் தொடங்கி மழை பெய்து வரும் நிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் , மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா / தாளடி / பிசானம் நெற்பயிருக்கான காப்பீடு இன்னும் இரண்டு நாட்களுக்குள் அதாவது நவம்பர் 15 அன்று முடிவடைவதால், இதுவரை சம்பா / தாளடி / பிசானம் நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர்க்கடன்பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் உரிய ஆவணங்களுடன் நவம்பர் 15ம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை - உழவர் நலத்துறை கேட்டுக் கொள்கிறது.
Disclaimer
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: Dinakaran